தர்மபுரி, மே 23: தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தர்மபுரி அரசு பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கான பொதுத்தேர்தல் மற்றும் அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது. நாடாளுமன்ற தொகுதி மற்றும் 2 சட்டமன்ற தொகுதிகளின் இடைத்தேர்தல்களில் பயன்படுத்திய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று (23ம்தேதி) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடக்கிறது.