ஆந்திர தொழிலதிபர் கார் விபத்தில் பலி

கிருஷ்ணகிரி, டிச.6:  ஆந்திர  மாநிலம், சித்தூர் கல்லுப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் வனஜசனாநாயுடு (63).  இவர் அப்பகுதியில் செங்கல் சூளை நடத்தி வந்தார். பெங்களூரில் மகள்  பிரியங்காவின் (32) உறவினர் வீட்டு திருமணத்தில் கலந்து கொள்ள, மனைவி  கலாவதியுடன் (56) சொகுசு காரில் சென்றார். நேற்று முன்தினம் இரவு மீண்டும் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். காரை அச்சவர்தன் என்பவர் ஓட்டி வந்தார். அன்று இரவு 7 மணியளவில்  கிருஷ்ணகிரியில் இருந்து குப்பம் செல்லும் ரோட்டில் கட்டிநாயனப்பள்ளில்  கார் சென்றபோது, முன்னால் சென்ற லோடுவேன் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கி கூச்சலிட்டனர்.

அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடிச்சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கலாவதியையும், டிரைவர் அச்சவர்தனையும் மீட்டனர். தொழிலதிபர் வனஜசனா நாயுடு சம்பவ இடத்திலேயே  பலியானார். கிருஷ்ணகிரி அரசு  மருத்துவமனையில் கலாவதிக்கும், டிரைவருக்கும் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து மகாராஜகடை  போலீசார் விசாரணை  நடத்தி வருகின்றனர்.

Related Stories: