சென்னை பெண் கொலை வழக்கில் குடியாத்தம் வாலிபர் குண்டாசில் கைது

குடியாத்தம், ஜூன் 19: சென்னை பெண் கொலை வழக்கில் தொடர்புடைய குடியாத்தம் வாலிபர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் வேலுச்சாமி மகள் தீபா(23). திருமணமாகி விவாகரத்து பெற்றவர். தனியார் செல்போன் கடையில் வேலை செய்து வந்தார். இவருக்கு வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னநாகல் கிராமத்தை சேர்ந்த குமார் மகன் ஹேம்நாத் ராஜ்(25) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 14ம் தேதி, ஹேம்நாத் ராஜை சந்திக்க தீபா சென்னையில் இருந்து ரயில் மூலம் குடியாத்தம் பகுதிக்கு வந்தார். பின்னர், அவரை ஹேம்நாத் ராஜ் ரயில் நிலையம் அருகில் உள்ள மலைக்கு அழைத்து சென்று, பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்து அறுத்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து ஹேம்நாத் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். கொலை வழக்கில் கைதான ஹேம்நாத் ராஜ் ஏற்கனவே ரயிலில் வேறு ஒரு பெண்ணை தாக்கி செயின் பறித்த வழக்கில் சிறைக்கு சென்றவர். இந்நிலையில், தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்ட அவரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேலூர் எஸ்பி மணிவண்ணன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஹேம்நாத் ராஜை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் சுப்புலட்சுமி நேற்று உத்தரவிட்டார். அதற்கான நகலை வேலூர் மத்திய சிறையில் உள்ள ஹேம்நாத் ராஜிடம் போலீசார் வழங்கினர்.

The post சென்னை பெண் கொலை வழக்கில் குடியாத்தம் வாலிபர் குண்டாசில் கைது appeared first on Dinakaran.

Related Stories: