ஊட்டமலை, சத்திரத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

பென்னாகரம், ஜூன் 16: அரசு பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி ஊட்டமலை, ராணிப்பேட்டை மற்றும் சத்திரம் பகுதியில் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்திய ஆசிரியர்கள், அந்த இடத்திலேயே அட்மிஷன் போட்டனர். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல் சுற்றுவட்டாரத்தில் 2 துவக்கப்பள்ளிகளும், ஊட்டமலை பகுதியில் ஒரு மேல்நிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. இங்கு கடந்த 2 ஆண்டுக்கு முன்பு 11,12ம் வகுப்பு மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டது. இந்த ஆண்டு 12ம் வகுப்பு தேர்வில், தனியார் பள்ளிக்கு நிகராக அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற முனைப்பில், ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளனர். தனியார் பள்ளிக்கு இணையாக ஒகேனக்கல் மலை பகுதியில் அமைந்துள்ள பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பிடிஏ நிர்வாகிகள் ஆகியோர் ஊட்டமலை, ராணிப்பேட்டை மற்றும் சத்திரம் ஆகிய கிராமங்களில் வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். அரசு பள்ளியின் சேர்க்கை குறித்தும், பாடத்திட்டங்கள் தொடர்பாகவும் பெற்றோரிடம் விளக்கி கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி அந்த இடத்திலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெற்றது.

The post ஊட்டமலை, சத்திரத்தில் விழிப்புணர்வு பிரசாரம் appeared first on Dinakaran.

Related Stories: