பெண் தொழிலதிபரை தாக்கி திருடிய சம்பவத்தில் 6 பேர் கைது

தஞ்சாவூர், செப். 12: தஞ்சாவூர் அருளானந்த நகர் 3வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் அண்ணாமலையின் மனைவி சேதுக்கரசி (70). இவர் ஆகஸ்ட் 16ம் தேதி நள்ளிரவு வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் வீட்டின் முன் பக்கக் கதவை உடைத்து கொண்டு உள்ளே புகுந்தனர். சத்தம் கேட்டு கீழே வந்த சேதுக்கரசியை துணியால் முகத்தைக் கட்டி அவரை மூக்கில் தாக்கி விட்டு, அவரிடம் இருந்த 9 பவுன் தங்க நகைகள், தலா 2 வைரக் காப்புகள், வைர மோதிரங்கள், தோடுகள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்தனர்.

மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், தஞ்சாவூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம் மேற்பார்வையில் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ஜெகதீசன் தலைமையில் உதவி ஆய்வாளர் தென்னரசு உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள அருந்தவபுரத்தைச் சேர்ந்த ராஜா (40), சூரக்கோட்டையை சேர்ந்த பாலமுருகன் (34), பாலமுருகன் (24), கபினேஷ் (31), திருவாரூர் மாவட்டம், வடுவூரைச் சேர்ந்த முத்துஆனந்த் (34), புதுச்சேரி குமந்தன் மேடைச் சேர்ந்த பிரபாகரன் (36) ஆகிய 6 பேரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post பெண் தொழிலதிபரை தாக்கி திருடிய சம்பவத்தில் 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: