செய்துங்கநல்லூர், ஜூன் 16: நெல்லை அருகே பனை ஏறும் போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்த நிலையில் அரசு மருத்துவமணையில் சேர்க்கப்பட்ட தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பாளை அடுத்த வல்லநாடு அருகேயுள்ள சிங்கத்தாக்குறிச்சி மேலத்தெருவைச் சேர்ந்தவர் தங்கவேல் (55). பனைத் தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். நேற்று முன்தினம் கனகராஜ் என்பவரது தோட்டத்தில் தங்கவேல் பனை ஏறும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார்.
தகவலறிந்த புளியம்பட்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தங்கவேலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
