பள்ளிகொண்டா, ஜூன் 16: பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலின் கும்பாபிஷேக திருப்பணியின் ஒரு பகுதியாக தெப்பக்குளம் சீரமைக்கும் பணியில் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக பக்கதர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பள்ளிகொண்டா ரங்கநாதர் கோயிலில் ரூ.1.50 கோடியில் திருக்கோயில் தெப்பக்குளம் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதில், தெப்பக்குளத்தில் ஏற்கனவே உள்ள பழைய தண்ணீரை வெளியேற்றி குளத்தை தூர்வாரி சுற்றியுள்ள அனைத்து படித்துறைகளையும் புதியதாக அமைக்க பணிகள் தொடங்கப்பட்டது.
பணிகள் தொடங்கியதிலிருந்து அதிகாரிகள் எந்தவொரு ஆய்வும் மேற்கொள்ளமால் இருப்பதால், பணிகளில் தொய்வு ஏற்பட்டு லட்சக்கணக்கான ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இந்நிலையில், கடந்த 3 மாதமாக கோயில் திருப்பணிகள் நிறுத்தப்பட்டதையடுத்து, தெப்பகுளம் பணிகளும் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. மேலும், மேற்கொள்ளப்பட்ட பணிகள் தரமற்ற முறையில் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தெப்பகுளத்தை சுற்றி அமைக்கப்படும் கருங்கற்கள் புதியதாக அமைக்காமல் பழைய கற்களையே சிமெண்ட் இல்லாமல் வெறும் செம்மண்ணை பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகிறதாம்.
தொடர்ந்து குளத்தை தூர்வாராமல், பெயரளவுக்கு மண்ணை தூர்வாரியுள்ளதாக பக்தர்கள், பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட மாவட்ட அறநிலையத்துறை அதிகாரிகள் கோயில் மற்றும் தெப்பகுளம் பணிகளை ஆய்வு செய்து தரமாகவும், விரைந்து முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
