திருவாரூர், ஜூன் 16: திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் வரும் 19ந் தேதி திருவாரூரில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு திருவாரூர் விளமல் ஆர்.வி.எல் நகரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது அவ்வப்போது சிறிய மற்றும் மாபெரும் அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வரும் 19ந் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரையில் மேற்படி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில் 25க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.
இத்தனியார்துறை முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை பதிவிறக்கம் செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு 04366-224226 என்ற தொலைபேசி எண்ணில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
