திருச்செந்தூர், ஜூன் 16: திருச்செந்தூர் முருகன் கோயில் அருகே நேற்று கடல் சுமார் 50 அடி உள்வாங்கியதால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. அறுபடை வீடுகளில் 2ம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயில், அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது. இதனால் இங்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடுவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றனர். பக்தர்கள் அதிகாலை முதல் இரவு வரை உற்சாகமாக நீராடி மகிழ்கின்றனர். இங்கு தமிழ் மாதங்களில் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் கடல் உள்வாங்குவதும், இயல்பு நிலைக்கு திரும்புவதும் வாடிக்கையாகி விட்டது.
இதேபோல நேற்று முன்தினம் பகல் 11.56 மணி முதல் நேற்று காலை 9.30 மணி வரை அமாவாசை திதி இருந்தது. இதன் காரணமாக அய்யா கோயில் பகுதியில் நேற்று காலை சுமார் 50 அடி தூரம் கடல் உள்வாங்கி பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. கடல் அலை உள்வாங்குவதும், வெளியேறுவதுமாக இருந்த போதிலும் பக்தர்கள் வழக்கம்போல கடலில் நீராடினர்.
