துவரங்குறிச்சி, ஜூன் 16: துவரங்குறிச்சி அருகே பேருந்துக்காக பல மணி நேரம் காத்திருக்கும் பள்ளி மாணவ, மாணவிகள் குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து இயக்கப்படாததால் படியில் அபாய பயணம் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த கள்ளக்காம்பட்டியில் கடந்த ஆண்டு வரை உயர்நிலைப் பள்ளியாக இயங்கி வந்த அரசு பள்ளி இந்த ஆண்டு முதல் மேல்நிலைப் பள்ளியாக இயங்கி வருகிறது. பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை தற்போது வரை 800ஐ கடந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக துவரங்குறிச்சியில் மேல்நிலைப்பள்ளி இயங்கி வரும் நிலையில் அப்பகுதியில் உள்ள மாணவர்களும் அதனைச் சுற்றியுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளும் கள்ளக்காம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியை நாடி வருகின்றனர்.
இப்பள்ளிக்கு வரும் மாணவர்கள் துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் காலை 7:50 மணிக்கு மட்டுமே பேருந்து உள்ளது. அதனை அடுத்து சுமார் 9:30 மணிக்கு மேல் தான் அரசு பேருந்து இயங்குகிறது. இதற்கு நேரத்தில் தனியார் மற்றும் பணம் செலுத்தி செல்லக்கூடிய அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதேபோன்று மாலை பள்ளி முடிந்த பிறகும் பேருந்து சரியான நேரத்திற்கு வருவதில்லை. சில நாட்களில் 4.15 மணிக்கு வரவேண்டிய பேருந்து 4 மணிக்கே சென்று விடுகிறது. இதனால் மாணவர்கள் பல மணி நேரம் காத்து கிடக்கும் நிலைமை உருவாகிறது. பேருந்து பணிமனையில் பேருந்தின் நேரத்தை மாற்றி தருமாறு பலமுறை பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தும் பேருந்தின் நேரத்தை மாற்றித் தர மறுக்கிறது பணிமனை அலுவலகம்.
மேலும் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளதால் கூடுதலாக பேருந்து இயக்க வேண்டும் எனவும் மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் போக்குவரத்து துறை அதிகாரிக்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.இதனால் அப்பகுதியில் வரக்கூடிய பேருந்துகளில் மாணவ ,மாணவிகள் படியில் தொங்கியபடியே பயணம் செய்கின்றனர். ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன் உடனடியாக அரசு அதிகாரிகள் கவனத்தில் கொண்டு கூடுதல் பேருந்து இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் கோரிக்கை விடுக்கின்றனர்.
Trichy-160626-3
