பொன்னேரி: பொன்னேரி அருகே நகைக்காக பெண் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 12 சவரன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. பொன்னேரி அடுத்த பழவேற்காடு பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (60). இவரது மனைவி வனஜா (55). இவர்களுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். 3 பேரும் திருமணமாகி சென்றதால் கணவன், மனைவி தனியாக வசித்து வந்தனர். வீட்டின் அருகில் ராதாகிருஷ்ணன் மளிகைக்கடை நடத்தி வரு கிறார். வனஜா வீட்டிலேயே மாவு விற்பனை செய்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் மளிகைக்கடையில் இருந்த கணவருக்கு தேநீர் கொடுத்துவிட்டு வனஜா வீட்டிற்கு திரும்பியுள்ளார். இதைத்தொடர்ந்து ராதாகிருஷ்ணன் வீட்டிற்கு வந்தபோது, பூட்டப்பட்டு இருந்த வீட்டை திறந்து உள்ளே சென்றுள்ளார். அப்போது, கழுத்து அறுபட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் சடலமாக மனைவி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து அலறி துடித்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பாலைவனம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரி சோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது மாவு வாங்குவதுபோல வீட்டுக்குள் புகுந்து கத்தியால் வனஜாவின் கழுத்தை அறுத்து தாலி சரடு, காதில் இருந்த தங்க கம்மல் என 15 சவரன் நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது. மேலும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இதனிடைேய, ஆவடி கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், துணை ஆணையர் மகேஸ்வரி, உதவி ஆணையர் கண்ணன் ஆகியோர் பரிந்துரையின்பேரில்இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையில் தனிப்படை அமைத்து கொலை யாளியை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அதிகாலை பழவேற்காடு பகுதியில் பதுங்கி இருந்த ஊத்துக்கோட்டையை சேர்ந்த யுகந்தர் என்ற அப்துல்ரகுமான் (35) என்பவரை கைது செய்து விசாரித்தபோது நகைக்காக கழுத்தை அறுத்து பெண்ணை கொலை செய்ததும், பழவேற்காடு பகுதியை சேர்ந்த முஸ்லிம் பெண்ணை காதலித்து திருமணம் செய்ததும் தெரியவந்தது. இவரிடம் இருந்து 12 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் காதலிக்கு நகை பரிசளிப்பதற்காக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டாரா? என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
