கணவரை கொலை செய்து நாடகமாடிய மனைவி கைது

கோவை: மது குடிக்க பணம் கேட்டு அடித்து சித்ரவதை செய்ததால், ஆத்திரத்தில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவரை கொலை செய்து விட்டு, நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் அன்னூர் அருகே மூக்கனூரை சேர்ந்த ரமேஷ் (38). கைத்தறி நெசவாளி. இவரது மனைவி சசி பிரியா (38). ரமேஷிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 10-ம் தேதி அதிகாலை 2 மணி முதல் ரமேஷ் வீட்டின் திண்ணையில் அமர்ந்து மது குடித்து வந்துள்ளார். 11-ம் தேதி காலை வரை தொடர்ந்து மது அருந்திய அவர், மீண்டும் மது குடிக்க மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். சசிபிரியா தன்னிடம் பணம் இல்லை என்று கூறவே ஆத்திரமடைந்த ரமேஷ் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை அடித்து துன்புறுத்தி உள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த சசி பிரியா, தனது கழுத்தில் இருந்த துப்பட்டாவை எடுத்து கணவர் ரமேஷின் கழுத்தில் போட்டு இறுக்கியுள்ளார்.மேலும் அவரது வாய் மற்றும் மூக்கை பொத்தி கீழே தள்ளியதில், ரமேஷ் அருகில் இருந்த கட்டிலின் மீது விழுந்து மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் கணவர் இறந்ததை மறைத்து, காலை 11 மணியளவில் ரமேஷிற்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது அண்ணன் கார்த்திகேயனுக்கு சசி பிரியா தகவல் கொடுத்துள்ளார். கார்த்திகேயனும் அவரது மனைவியும் வந்து பார்த்தபோது, ரமேஷ் கட்டிலுக்கு கீழே பாயில் அசைவற்று கிடந்துள்ளார். உடனடியாக அவரை மூக்கனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், ரமேஷின் கழுத்து மற்றும் முகத்தில் லேசான கீறல் காயங்கள் இருப்பதை சுட்டிக் காட்டினார். பின்னர் மேல் சிகிச்சைக்காக அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அன்னூர் போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் தனது தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கார்த்திகேயன் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் அன்னூர் போலீசார், சசி பிரியாவிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, மது குடிக்க பணம் கேட்டு அடித்ததால், ஆத்திரத்தில் துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கணவரை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து அன்னூர் போலீஸார் ரமேஷின் சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றி சசிப் பிரியா மீது வழக்குப்பதிவு செய்து, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: