மாதவரம்: ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியிடம் சீண்டலில் ஈடுபட்ட டிரைவரை பயணிகள் சரமாரியாக அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர். சென்னை பிராட்வேயில் உள்ள அரசு கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படிக்கும் மாணவி ஒருவர், நேற்று மாலை பிராட்வேயில் இருந்து மணலி செல்லும் மாநகர பேருந்து தடம் எண் ‘’38ஏ’’வில் சென்றுள்ளார். அந்த பஸ், வியாசர்பாடி பேருந்து நிலையம் வந்ததும் அதில் ஏறிய போதை ஆசாமி ஒருவர், மாணவி பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு திடீரென மாணவியின் உடலில் கையை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டு உள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி கூச்சல் போடவே பயணிகள் எழுந்துவந்த அந்த போதை ஆசாமியை சரமாரியாக அடித்து உதைத்தனர். மூலக்கடை பேருந்து நிறுத்தம் வந்ததும் போதை ஆசாமி தப்பியோடினார். ஆனால் பயணிகள் விரட்டிச்சென்று அவரை பிடித்து மீண்டும் தர்ம அடி கொடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மாதவரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பொன்னியம்மன்மேட்டை சேர்ந்த லிங்கப்பன் (45) டிரைவர் என்பது தெரிந்தது. அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
