கேரளாவில் மனைவிகளை கைமாற்றி உல்லாசம்; புகார் அளித்த இளம்பெண் கொடூர கொலை:கணவர் தற்கொலை முயற்சி

திருவனந்தபுரம்: கேரளாவில் சமூக வலைதள குரூப்புகள் மூலம் மனைவிகளை கைமாற்றி உல்லாசத்தில் ஈடுபடுத்திய சம்பவத்தில் புகார் அளித்த இளம்பெண் வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். போலீஸ் விசாரணைக்கு பயந்து அப்பெண்ணின் கணவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மணற்காடு பகுதியை சேர்ந்தவர் ஷினோ. அவரது மனைவி (26). இவர், கடந்த வருடம் ஜனவரி மாதம் கோட்டயம் கருகச்சால் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய போலீசுக்கு பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. இளம்பெண்ணின் கணவர் ஷினோ மெசஞ்சர், டெலகிராம் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் ‘கப்பிள் மீட் அப் கேரளா’ என்ற குழுவில் உறுப்பினராக இணைந்துள்ளார். இந்த குழுவில் உள்ளவர்கள் மனைவிகளை பிறருக்கு கைமாற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த குரூப்புகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தம்பதிகள் உள்பட 5000 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் பணம் வாங்கிக்கொண்டு ஒருவருக்கொருவர் மனைவிகளை கைமாற்றம் செய்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த குரூப்பில் ஷினோ தனது மனைவியை வலுக்கட்டாயமாக இணைத்துள்ளார்.

இதனை பயன்படுத்தி ஷினோவின் மனைவியை 9 பேர் கொடூரமாக பலாத்காரம் செய்ததாக அவரது மனைவி புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஷினோ உள்பட ஆலப்புழா, கோட்டயம் மற்றும் எர்ணாகுளத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் விசாரணையை தொடங்கிய உடன் பெரும்பாலானோர் இந்த குரூப்பில் இருந்து வெளியேறி விட்டனர். இந்த சம்பவத்திற்கு பின்னர் தன் மனைவிக்கு ஷினோ அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் அவர் தனது குழந்தைகளுடன் மணற்காட்டில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கு தந்தையும், 2 சகோதரர்களும் உள்ளனர். நேற்று காலை இவர்கள் அனைவரும் வேலைக்கு சென்றிருந்தனர். குழந்தைகள் பக்கத்து வீட்டில் விளையாட சென்றிருந்தனர். வீட்டில் இளம்பெண் மட்டுமே தனியாக இருந்தார். நேற்று காலை 10.30 மணியளவில் குழந்தைகள் வீட்டுக்கு வந்தபோது அவர் வீட்டின் முன் ரத்த வெள்ளத்தில் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார். இது குறித்து அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று இளம்பெண்ணின் உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக இளம்பெண்ணின் தந்தை போலீசில் புகார் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது: என்னுடைய மகளுக்கு ஷினோ அடிக்கடி கொலை மிரட்டல் விடுத்து வந்தார். இன்று (நேற்று) காலை எனக்கு போன் செய்து என் மனைவி எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நான் தெரியாது என்று கூறிவிட்டேன்.நானும், என்னுடைய மகன்களும் வேலைக்காக வெளியே சென்றிருந்தோம். வீட்டில் மகள் மட்டுமே இருந்தார். என்னுடைய மகளை ஷினோ தான் கொலை செய்துள்ளார். எனவே அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து ஷினோ மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஷினோவை பிடிப்பதற்காக காஞ்சிரப்பள்ளி டிஎஸ்பி தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில் போலீசார் விசாரணைக்கு பயந்து ஷினோ அவருடைய வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து போலீசார் அவரை கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரிடம் விசாரணை நடத்தினால் தான் மனைவியை ஷினோதான் கொலை செய்தாரா? அல்லது வேறு யாரும் கொலை செய்தார்களா? என்ற உண்மை தெரியவரும்.

The post கேரளாவில் மனைவிகளை கைமாற்றி உல்லாசம்; புகார் அளித்த இளம்பெண் கொடூர கொலை:கணவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Related Stories: