கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

வேளச்சேரி: ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர். வேளச்சேரி, தண்டீஸ்வரம் நகர், 7வது மெயின் ரோட்டை சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் (63). சென்னை கிழக்கு மாவட்ட பாஜ அரசு தொடர்பு பிரிவு செயலாளராக உள்ளார். இவர், நேற்று முன்தினம் வேளச்சேரி விஜயநகரில் நடந்த பாஜ ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது, அந்த கூட்டத்தில், நிர்வாகிகளிடையே, நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கூட்டம் முடிந்து பாலசுப்பிரமணியன் வெளியே வந்துள்ளார். அப்போது சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சாய் சத்யனுக்கும், பாலசுப்ரமணியனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது மாவட்ட தலைவர் சாய்சத்யன் கொலை மிரட்டல் விடுத்து, தகாத வார்த்தைகளால் பாலசுப்பிரமணியனை திட்டியுள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணியன் இதுபற்றி வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், பாஜ மாவட்ட தலைவர் சாய்சத்யன் மீது 294, 352, 506(1) ஆகிய 3 பிரிவுகளின் கீழ், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், சாய் சத்யனை தேடி அவரது வீட்டிற்கு சென்றபோது அவர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. அவரை தேடி வருகின்றனர்.

The post கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: