ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகள் பறிமுதல்

தண்டையார்பேட்டை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். வெளிமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் கஞ்சா, போதை பாக்கு, புகையிலை உள்ளிட்டவற்றை கடத்தி வருவதை தடுக்கும் விதமாக ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து நேற்று காலை சென்னை சென்ட்ரல் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி வந்தனர்.

அதில், சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். அவரது பையை சோதனை செய்தபோது, அதில் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில், சைதாப்பேட்டை குமரன் நகர் 1வது தெருவை சேர்ந்த கார்த்திக் (18) என்பதும், விஜயவாடாவில் இருந்து போதை மாத்திரைகளை கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்வதும் தெரிந்தது.
அவரிடம் இருந்து 700 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாரேனும் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஆந்திராவிலிருந்து கடத்தி வரப்பட்ட 700 போதை மாத்திரைகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Related Stories: