ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் தர்ணா

பெரம்பூர்: ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து பெரம்பூர் கேரேஜ் பணிமனை முன்பு எஸ்ஆர்இஎஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் நேற்று தர்ணா போராட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க நிர்வாக பொதுச் செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். இதில், ரயில்வே துறையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ரயில்வே துறையை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். பயிற்சி முடித்த ஊழியர்களுக்கு உடனடியாக வேலை வழங்கிட வேண்டும். ரயில்வே மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட வேண்டும். பணிமனைகளில் அடிப்படை மற்றும் பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டன. போராட்டத்தில், பொதுச் செயலாளர் சூரிய பிரகாசம், நிர்வாக தலைவர் சூர்யபிரகாஷ் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள், ரயில்வே தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து ரயில்வே தொழிற்சங்கம் தர்ணா appeared first on Dinakaran.

Related Stories: