ஊத்துக்கோட்டை அருகே இருவரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே, இருவரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஊத்துக்கோட்டை அருகே பனப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருபவர் சரஸ்வதி (45). இவர் பாலவாக்கம் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தார். அப்போது அங்கு ஹெல்மெட் அணிந்து நின்று கொண்டிருந்த மர்ம நபர்கள், 10 ரூபாய் நோட்டுகளை கீழே சிதறவிட்டு, சரஸ்வதியிடம் உங்கள் பணம் கீழே விழுந்துள்ளது என்றனர். இதையறிந்த சரஸ்வதி சிதறிய பணத்தை எடுக்க முற்பட்ட போது, மர்ம நபர்கள் சரஸ்வதியிடம் இருந்த ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்தை பறித்துக்கொண்டு, மோட்டார் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். இதுகுறித்து ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் சரஸ்வதி புகார் செய்தார்.

மற்றொரு சம்பவம்: ஊத்துக்கோட்டை அருகே ஸ்ரீராமாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் இந்திரபாபு (65). விவசாயியான இவர் ஊத்துக்கோட்டை அருகேயுள்ள ஆந்திரா மாநிலம் தாசுகுப்பம் கிராமத்தில் உள்ள ஆந்திரா வங்கியில் இருந்து ரூ.2 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு, ஊத்துக்கோட்டை திருவள்ளூர் சாலையில் உள்ள உரக்கடைக்கு உரம் வாங்க சென்றார். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த மர்ம நபர்கள், விவசாயியிடம் இருந்து ரூ.2 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து இந்திரபாபு ஊத்துக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இவ்விரு புகார்களின்பேரில், இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகிறார்.

The post ஊத்துக்கோட்டை அருகே இருவரிடம் நூதன முறையில் ரூ.3 லட்சம் பறிப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை appeared first on Dinakaran.

Related Stories: