திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட போது, நூதன முறையில் 1.15 லட்சத்தை திருடிய பெண் ஊழியர்கள் 2 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் புகழ்பெற்ற முருகன் கோயிலுக்கு தினந்தோறும் தமிழ்நாடு, ஆந்திர, கர்நாடக, உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசித்து தங்களது நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மலைக் கோவிலில் உள்ள உண்டியல்களில் நகை, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் செலுத்துவது வழக்கம்.

பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை பிரதி மாதம் கோயில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவது வழக்கம்.  அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோயில் கோயில் இணை ஆணையர் அருணாச்சலம் (பொறுப்பு) முன்னிலையில் கோயில் உண்டியல்கள் திறக்கப்பட்டு நேற்று எண்ணப்பட்டது. இதில் திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணத்தை நூதன முறையில் திருடியது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து அந்த ஊழியர்களிடம் பெண் ஊழியர்கள் சென்று பரிசோதனை செய்ததில் அவர்கள் இருவரும் ஆண்கள் அணியும் உள்ளாடை அணிந்து கொண்டு அதில் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் 790 ரூபாய் பணம் திருடி வைத்திருந்தது தெரிய வந்தது.

இச்சம்பவம் குறித்து திருக்கோவில் நிர்வாகம் சார்பில் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணையில் திருத்தணி முருகன் கோயிலில் நிரந்தர பணியாளர் சுருதி வாசிப்பாளர் வீரமங்கலம் கிராமத்தை சேர்ந்த தேன்மொழி(35), ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வரும் ஆர்கே பேட்டை அருகே நாகபூண்டியை சேர்ந்த வைஜெயந்தி(44) என தெரிய வந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், திருடப்பட்ட பணத்தை பறிமுதல் செய்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை 1.15 லட்சம் நூதன முறையில் திருட்டு: பெண் பணியாளர் 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: