திருவள்ளூர், மார்ச் 12: திருவள்ளூர் நகரில் கழிவு நீர் மற்றும் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் அகற்றி தூர்வாராததால், ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், வரும் பருவமழையில் திருவள்ளூர் நகரம் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.திருவள்ளூர் நகரில் மழைநீர் வடிகால்வாய் முறையாக அமைக்கப்படவில்லை. தற்போது, திருவள்ளூர் நகரம் முழுவதும் அமைக்கப்பட்டு உள்ள மழைநீர் வடிகால்வாயில் சேகரமாகும் தண்ணீர், வெளியேற்றுவதற்கான வழியும் இல்லை. அவற்றை தேடுவதற்கான முயற்சியிலும், நகராட்சி மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகள் ஈடுபடுவதாக தெரியவில்லை.பெரியகுப்பம் ரயில் நிலையம் அருகில் துவங்கி, ஜெ.என்.சாலை, அரசு மருத்துவமனை பின்புறம் வழியாக, வி.எம்.நகர், 100 அடி சாலையைக் கடந்து, காக்களூர் ஏரியில் சேரும் பொதுப்பணி துறை கால்வாய் உள்ளது. இதேபோல், ஒன்றாவது வார்டான டோல்கேட்டில் துவங்கி, சி.வி.நாயுடு சாலை, நேதாஜி சாலை, குளக்கரை தெரு, பஸ் நிலையம் வழியாக, காக்களூர் ஏரிக்கு செல்லும் மற்றொரு பொதுப்பணி துறை கால்வாயும் உள்ளது.