தாராபுரம், மார்ச் 10: குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி தாராபுரத்தில் நேற்று முன்தினம் இரவு அகில இந்திய சிறுபான்மையினர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அமைப்பின் தாலுகா செயலாளர் ரகுபதி தலைமை தாங்கினார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் தென்னரசு, விடுதலைச் சிறுத்தைகள் மாவட்ட தலைவர் தமிழ்முத்து, முஸ்லிம் லீக், மற்றும் அனைத்து இஸ்லாமிய ஜமாத் சார்பில் முகமது யூசுப்,முஸ்லீம்லீக் சாதுல்லா ஜமாத் பிரதிநிதிகள் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து திருப்பூர் எம்.பி. சுப்பராயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் முன்னதாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது: சுதந்திர இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத அளவில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஒரு சட்டத்தை எதிர்த்து மக்களும்,மாணவர்களும் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைதி போராட்டத்தை சகிக்க முடியாமல் டெல்லியிலே பா.ஜ.வினர் தங்களது சட்ட விரோத கும்பலை இறக்கிவிட்டு வன்முறையில் ஈடுபட வைத்தார்கள் என நாடே குற்றம் சாட்டுகிறது.