ஆவடி, பிப்.26: ஆவடி அடுத்த அண்ணனூர், அம்பத்தூர், கொரட்டூர் ஆகிய பகுதிகளில் நடைபெறும் ரயில்வே பணிகளை டி.ஆர்.பாலு எம்.பி அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில்வே மேம்பாலம் மற்றும் கொரட்டூர் ரயில்வே மேம்பாலம் ஆகிய பணிகள் கடந்த 7ஆண்டுகளுக்கு மேலாக ஆமைவேகத்தில் நடக்கிறது. இதனால், ரயில் பயணிகள், பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.
இதனை, துரிதப்படுத்தக்கோரி பொது நலசங்கங்கள் சார்பில் ரயில்வே அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றன.இதனையடுத்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி திமுக எம்.பி, டி.ஆர்.பாலு ரயில்வே அதிகாரிகளுடன் மேற்கண்ட இரு மேம்பால பணிகளை நேற்று ஆய்வுசெய்தார். மேலும், அவர் அப்பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.அதோடு மட்டுமல்லாமல், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஜோலார்பேட்டை, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் வகையில் பிளாட்பாரம், மேற்கூரையை விரிவுபடுத்தவும், அம்பத்தூர் ரயில்வே கேட்டில் அமைய இருக்கும் சுரங்கப்பாதை, அம்பத்தூர் சி.டி.எச். சாலையில் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரிவுபடுத்தும் பணிகள் குறித்தும் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க ரயில்வே அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.