வேதாரண்யம்,பிப்.7: பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கிறது. இதனால் விற்க முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.வேதாரண்யம் தாலுகாவில் இந்த ஆண்டு சம்பாசாகுபடி சுமார் 24 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நடைபெற்றது. இதில் தலைஞாயிறு பிராந்தியங்கரை மூலக்கரை உள்ளிட்ட ஆற்று பாசன பகுதியில் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரும் மானாவரியில் மழையை மட்டுமே நம்பி உள்ள ஆயக்காரன்புலம், வாய்மேடு, ஆதனூர், பஞ்சநதிகுளம் சுமார் 12 ஆயிரம் ஹெக்டேரும் சம்பாசாகுபடி நடைபெற்றது. தற்போது கதிர்கள் முற்றி சம்பா அறுவடை பணி தாலுகா முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விவசாயிகள் அறுவடை செய்த நெல்லுக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என நாகை மாவட்டத்தில் அரசு நேரடிநெல் கொள்முதல் நிலையங்களை திறந்து உள்ளது. குறிப்பாக ஆற்றுபாசன பகுதியான தலைஞாயிறு பிராந்தியங்கரை, வடமழை, மணக்காடு, தாணிக்கோட்டகம் ஆகிய இடங்களில் அறுவடை செய்த நெல்லை வியபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நல்ல நோக்கத்தில் கடந்த 30ம் தேதி முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.