திருவள்ளூர், ஜன. 19: திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீஸ் நிலையத்தில் பறிமுதல் வாகனங்களை நிறுத்தி வைத்துள்ளதால், அதை சுற்றிலும் புதர் மண்டிக்கிடப்பதோடு, பாம்புகள் தொல்லை அதிகரித்து உள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் போலீசார் அச்சத்தில் உள்ளனர். திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் போலீஸ் நிலையம் அருகே ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்நிலையில், மணல் கடத்தல் மற்றும் விபத்து வாகனங்களை பறிமுதல் செய்யும் போலீசார், அதை கொண்டுவந்து போலீஸ் நிலையம் நுழைவாயில் பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். பல மாதங்களாக இந்த வாகனங்கள் ஒரே இடத்தில் உள்ளதால் அதை சுற்றிலும் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், அதில் ஏராளமான பாம்புகள் குடிபுகுந்துள்ளன. இந்த பாம்புகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் உலா வருவதால், பொது மக்களும், போலீஸ் நிலையத்துக்குள் புகுவதால் போலீசாரும் அச்சத்தில் உள்ளனர்.