போலீஸ் வாகனத்தின் மீது பைக் மோதி இருவர் காயம்

 

பூந்தமல்லி, மார்ச் 23: சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் மகேஷ். இவர் மதுரவாயல் பகுதியில் வேலை தொடர்பாக நண்பர் ஒருவரை பார்த்து விட்டு செல்வதற்காக போலீஸ் வாகனத்தில் நேற்று முன்தினம் தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலை, போரூர் சுங்கச்சாவடி அருகே சென்று கொண்டிருந்தார். வாகனத்தை போலீஸ்காரர் ஞானசேகரன்(35), என்பவர் ஓட்டி சென்றார்.
ஞானசேகரன் வாகனத்தை சாலையின் இடதுபுறம் ஓரமாக நிறுத்திவிட்டு வலது புறம் கதவை திறந்து வெளியே வந்த போது பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் போலீஸ் வாகனத்தின் கதவில் மோதியது. இதில் போலீஸ்காரர் ஞானசேகரன் மற்றும் இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்த விஜயகுமார்(32), ஆகிய இருவரும் காயமடைந்தனர்.
இதையடுத்து காயம் அடைந்த இருவரையும் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். அங்கு இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: