மணமேல்குடி, டிச.19: மார்கழி மாதம் நேற்று தொடங்கியுள்ளதால் மணமேல்குடி பகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம்செய்தனர்.மாதங்களில் சிறந்தது “மார்கழி” மாதமாகும். பகவான் கிருஷ்ணர் மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கின்றேன் என்று பகவத்கீதையில் கூறுவதன் மூலம் இந்த மார்கழி மாதம் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. நேற்று மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு அதிகாலையிலேயே பெண்கள் எழுந்து, குளித்துவிட்டு தங்கள் வீட்டு முற்றத்தில் வண்ணக் கோலமிட்டு, மாட்டுச் சாணத்தால் விநாயகரை உருவம் செய்து, அதன் மேல் பூசணிப் பூ மற்றும் அருகம்புல் வைத்து விளக்கேற்றி வழிபட்டனர்.