தூத்துக்குடி: தூத்துக்குடியில் தடுப்புச்சுவரில் பைக் மோதியதில் கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார். அவரது உறவினர் படுகாயமடைந்தார். தூத்துக்குடி 3ம் மைல் பகுதியைச் சேர்ந்த உச்சிகுமார் மகன் சந்தானம் (18). தூத்துக்குடியில் செயல்படும் தனியார் கல்லூரியில் பிஏ முதலாம் படித்து வந்தார். இவரும், இவரது உறவினரான அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரின் மகனுமான சதீஷ்குமார் (19) என்பவரும் நேற்று முன்தினம் தூத்துக்குடி- பாளை ரோட்டில் பைக்கில் வந்துகொண்டிருந்தனர். பைக்கை சதீஷ்குமார் ஓட்டினார்.
இதில் எதிர்பாராத விதமாக சாலை நடுவே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச்சுவரில் பைக் மோதியது. அப்போது இவர்கள் பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், இவர்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே சந்தானம் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சதீஷ்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் விபத்திற்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.