கடலூர், நவ. 20: கடலூர் பேருந்து நிலையத்தில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கடலூர் நகராட்சி அலுவலகத்தில் பொதுநல இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் நகராட்சி பேருந்து நிலையத்தில் சட்டவிரோதமாக உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ரவுடிகள் வியாபாரிகளிடம் மாமூல் வசூலிப்பதை தடுக்க வேண்டும், சிறு வியாபாரிகள் சங்க உறுப்பினர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்புக் கொடியுடன் காத்திருப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தனர். அதன்படி கடலூர் அனைத்து பொது நல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் திருமாறன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சேகர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் திருமார்பன், பேருந்து நிலைய சிறு வியாபாரிகள் சங்க தலைவர் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.