உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

உளுந்தூர்பேட்டை, ஏப். 28: உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்த விபத்தில் 15 பயணிகள் படுகாயமடைந்தனர். நாகர்கோவிலில் இருந்து தனியார் ஆம்னி பஸ் ஒன்று 30க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை திருச்செந்தூரை சேர்ந்த ஹரிஹரன் (56) என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த பஸ் நேற்று அதிகாலை உளுந்தூர்பேட்டை அடுத்த ஆசனூர் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அங்கு மேம்பால பணிக்காக புறவழிச்சாலை அமைக்கப்பட்டு இருப்பது தெரியாமல் சாலை ஓர தடுப்பு கட்டையில் பஸ் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சை ஓட்டிச் சென்ற ஹரிஹரன் மற்றும் பஸ்சில் பயணம் செய்த பாரதி(26), பெனிஷா(25), பின்னி(42), சாம் வில்சன்(13), சாந்தி ஜெபராணி(45), இந்துமதி(41), குமார்(53), சபரிநாதன்(26) உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர்.

மேலும் 5 பேர் லேசான காயம் அடைந்தனர்.இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற எடைக்கல் காவல் நிலைய போலீசார், விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் திருச்சி-உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் விபத்துக்குள்ளான பஸ்சை கிரேன் மூலம் அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உளுந்தூர்பேட்டை அருகே ஆம்னி பஸ் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து appeared first on Dinakaran.

Related Stories: