வரத்து குறைவால் மீன்கள் விலை கடும் உயர்வு

 

கடலூர், மே 6: கடலூரில் அக்கரைகோரி, சிங்காரத்தோப்பு, சோனங்குப்பம், தேவனாம்பட்டினம், தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான மீனவர்கள் தினந்தோறும் கடலுக்குள் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இதன் காரணமாக கடலூர் துறைமுகத்தில் அதிகாலை முதலே மீன் விற்பனை தொடங்கிவிடும்.

இந்நிலையில் ஏப்ரல் 15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதப்படுவதால், இந்த இடைப்பட்ட காலங்களில் விசை படகுகளில் ஆழ் கடலில் சென்று மீன் பிடிக்க ஒவ்வொரு வருடமும் தடை விதிக்கப்படும். அதன்படி தற்போது மீன்பிடி தடை காலம் நடைபெற்று வருகிறது. அதே சமயத்தில் சிறிய வகை பைபர் படகுகளில், ஒரு குறிப்பிட்ட அளவு தூரம் கடலுக்கு சென்று தற்போது மீன்பிடித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று கடலூர் துறைமுகத்தில் மீன்கள் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. இதன் காரணமாக மீன்கள் விலை கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.

வஞ்சிரம் ஒரு கிலோ ரூ.1200க்கும், கொடுவா மீன் 800 ரூபாய் வரைக்கும். வழக்கமாக 200 ரூபாய்க்கு விற்கப்படும் கனவாய் மீன் 350 ரூபாய்க்கும், இறால் 300 ரூபாய்க்கும், 200 ரூபாய்க்கு விற்கப்படும் சங்கரா மீன் 400 ரூபாய்க்கும், நண்டு 400 ரூபாய்க்கும், ஓரா மீன் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. மேலும் தற்போது மீன்பிடி தடை காலம் என்பதால் குறைந்த அளவே பொதுமக்கள் மீன்கள் வாங்க வந்திருந்தனர். விலை அதிகம் காரணமாக அவர்கள் குறைந்த அளவிலேயே மீன்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

The post வரத்து குறைவால் மீன்கள் விலை கடும் உயர்வு appeared first on Dinakaran.

Related Stories: