சுசீந்திரம், செப்.26: திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க நேற்று காலை சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் பவனியாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தமிழக, கேரள போலீசார் பேண்ட் வாத்தியம் முழங்க மரியாதை செலுத்தினர்.திருவனந்தபுரத்தில் வருடம்தோறும் 10 நாள் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை குமார கோவில் முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் பவனியாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் 9 நாட்கள் வைத்து பூஜைகள் செய்வார்கள். விழா முடிந்ததும் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு சாமி சிலைகள் கொண்டு வரப்படும்.இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சுவாமி சிலைகள் குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் இருந்து இன்று (26ம் தேதி) பவனியாக கொண்டு செல்லப்படுகிறது.முன்னதாக நேற்று (25ம் தேதி) முன்னுதித்த நங்கை அம்மன் பத்மநாபபுரத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி சுசீந்திரத்தில் நடந்தது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், அம்மன் முன்புள்ள சக்கரத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் தாணுமாலயன் சுவாமி கோயிலின் 4 ரத வீதிகளையும் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்ேபாது பக்தர்கள் அம்மன் மீது பூக்களை தூவி வழிபட்டனர். இதனால் 4 ரத வீதிகளும் பூக்களால் நிரம்பி காணப்பட்டது.