பெரம்பலூர், செப். 10: வேப்பந்தட்டை அருகே அடுத்தடுத்து பொதுக்கிணறு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம நடத்தினர். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா பசும்பலூர் கிராமத்தில் இருந்து நெற்குணம் செல்லும் சாலையில் அய்யனார் கோயில் அருகே பொதுக்கிணறு, மின் மோட்டாருடன் கூடிய அடிப்பம்பு உள்ளதாம். இந்நிலையில் அதனருகே புதிதாக பொதுக்கிணறு அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையறிந்த கிராம மக்கள் ஒரே இடத்தில் அடுத்தடுத்து கிணறுகள் அமைத்தால் நிலத்தடி நீர்மட்டம் குறைவதோடு அரசு பணமும் விரயமாகும் என கருதி மாற்று இடத்தில் பொதுக்கிணறு அமைக்க வேண்டுமென வலியுறுத்தி கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.