பள்ளிபாளையம், ஜூன் 7: பட்டா, பத்திரம் கொடுத்து 5 ஆண்டுகள் ஆகியும், அதற்கான இடத்தை வழங்காமல் வருவாய்த்துறையினர் அலைக்கழித்து வருவதாக ஆவாரங்காடு பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளிபாளையம் ஓடப்பள்ளி காவிரி ஆற்றின் குறுக்கே, தடுப்பணை கட்டப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இதற்காக தண்ணீரை 12 அடி உயரத்திற்கு தேக்குவதால் பள்ளிபாளையம், ஆவாரங்காடு, பெரியார் நகர், சுபாஷ் நகர் ஆகிய பகுதியில் காவிரி கரையோரத்தில் குடிசை வீடுகள் தண்ணீரில் மூழ்கின. இதையடுத்து மாவட்ட நிர்வாகம் உத்தரவின் பேரில், 5 ஆண்டுகளுக்கு முன், இப்பகுதியில் வசித்த 335 குடும்பத்தினருக்கு, காடச்சநல்லூர் ஊராட்சி மண்கரடு என்ற பகுதியில் மாற்று இடம் ஒதுக்கப்பட்டது. இந்த இடம் சமதளமாக இல்லாமல் சிறு குன்றுகளாக இருந்ததால், பட்டா பெற்றவர்களால் அங்கு வீடு கட்ட முடியவில்லை.