நாமக்கல், மார்ச் 3: நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (மகளிர் திட்டம்) கீழ், நாமக்கல் மாவட்டத்தில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் வங்கி பணி தொடர்பான அனைத்து பணிகளையும் ஒருங்கிணைப்பதற்காக புதியதாக உருவாக்கப்பட்டுள்ள மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு, தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் அரசு திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதற்காகவும், மற்ற அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து, மாவட்ட வாழ்வாதார மற்றும் கடன் மேலாண்மை நிறுவனத்தை நிறுவுவதற்கும், மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு மனிதவள வெளி முகமை நிறுவனம் மூலம் தேர்வு செய்யப்படுகிறது. இந்த பணியிடத்திற்கு தகுதியுடைய நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. மாவட்ட வங்கி ஒருங்கிணைப்பாளர் பணிக்கு, ஓய்வு பெற்ற வங்கி அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்கள், வரும் 6ம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்களை மேலாளர், மாவட்ட முகமை, பொன்விழா நகர், வகுரம்பட்டி, நாமக்கல் மாவட்டம்- 637001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.
