மல்லசமுத்திரம், மார்ச் 11: மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலை பாலசுப்ரமணியர் கோயிலுக்காக புதிய மலை பாதையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி மூலம் திறந்து வைத்தார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் ஒன்றியம் மரப்பரை ஊராட்சி வையப்பமலை மலை குன்றின் மேல் அமைந்துள்ள பழமை வாய்ந்த சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு பக்தர்கள் படிக்கட்டுகள் வழியாக சென்று வருவதால் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் சிரமப்பட்டனர். இதையடுத்து, கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி நபார்டு திட்டம் 2024-25ன் கீழ் ரூ.4.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, சாலை அமைக்க ஈஸ்வரன் எம்எல்ஏ., தலைமையில் பூமி பூஜை செய்து பணிகள் தொடங்கியது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, தமிழக முதலமைச்சர் மு.க.‘ஸ்டாலின் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், மலைப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையடுத்து, வையப்பமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், ராஜேஸ்குமார் எம்பி., ஈஸ்வரன் எம்எல்ஏ., ஆகியோர் கலந்து கொண்டு மலைப்பாதையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்கினர். முன்னதாக 1008 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. சுவாமிக்கு பால், தயிர், இளநீர், பன்னீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
வையப்பமலையில் புதிய மலைப்பாதை திறப்பு விழா
- வையப்பமலை
- மல்லசமுத்திரம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- வையப்பமலை பாலசுப்ரமணியர் கோவில்
- வையப்பமலை மலை
- நாமக்கல் மாவட்டம்
- மரப்பறை
