கழுகுமலை, மே 29: கழுகுமலை கொடிமரத்து பேச்சியம்மன் கோயில் கொடை விழா நடந்தது. 100க்கும் மேற்பட்டோர் பால்குடம், தீர்த்த குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலுக்குப் பாத்தியப்பட்ட கொடிமரத்து பேச்சியம்மன் மற்றும் அண்ணா மேலத்தெருவில் உள்ள விநாயகர், அண்ணா கீழத்தெருவில் உள்ள திரிபுர சுந்தரி பேச்சியம்மன் கோயில் கொடை விழா கடந்த வாரம் செவ்வாய் (21ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று குற்றாலம், பாபநாசம் ஆகிய புண்ணிய தலங்களிலிருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, காலை 10 மணிக்கு மேல் பால்குடம் வைபவம் நடந்தது. பட்டத்து யானை, ெசண்டை மேளம் முழங்க மலையை கிரிவலமாக வந்து 12 மணிக்கு மேல் விநாயகர், பேச்சியம்மனுக்கு அபிஷேகம், சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் மாவிளக்கு ஊர்வலமும், 12 மணிக்கு சாம பூஜையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாட்டினை செங்குந்தர் சமுதாய தலைவர் வேலு, செயலாளர் தங்கராஜ், பொருளாளர் முப்பிடாதி, கவுரவ ஆலோசகர் சண்முகம் மற்றும் சமுதாயத்தினரும், பொதுமக்களும் திரளானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.