சென்னை, பிப். 15: சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) கூறியது: ஆலந்தூர் தொகுதியில் அய்யப்பன்தாங்கல் - மவுலிவாக்கம் இடையே மினிபஸ் இயக்க அரசு முன்வருமா? அமைச்சர் விஜயபாஸ்கர்: தற்போது 3 மினி பஸ்கள் அய்யப்பன்தாங்கல் ராஜரத்தினம் நகர் வழியாக இயக்கப்படுகின்றன. அய்யப்பன்தாங்கல் -மவுலிவாக்கம் இடையே போதிய அளவில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, தற்போது அந்த பகுதியில் மினி பஸ் இயக்க அவசியம் எழவில்லை. தா.மோ. அன்பரசன்: அய்யப்பன்தாங்கல் -மவுலிவாக்கம் பகுதிகளில் முருகன் நகர், மதுரம் நகர், இந்திராணி நகர் சாய் நகர், அபிராமி நகர் போன்ற இடங்களில் 30 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அய்யப்பன்தாங்கல் வருவதற்கு 3 கி.மீ. நடந்து வர வேண்டியுள்ளது. எனவே மதுரம் நகர் வழியாக மினி பஸ் இயக்க வேண்டும்.