ஆம்பூர் அருகே வன எல்லையில் சிறுத்தை நடமாட்டம் பொதுமக்கள் அச்சம்

ஆம்பூர், டிச.12: ஆம்பூர் அருகே உள்ள வன எல்லையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆம்பூர் வனப்பகுதி, ஆந்திர மாநில வனப்பகுதிகளையொட்டி துருகம், ஊட்டல் காப்புக்காடுகள் உள்ளன. இந்த காடுகளையொட்டி சின்ன மலையாம்பட்டு, பெரியமலையாம்பட்டு, மிட்டாளம், பைரப்பள்ளி, அரங்கல்துருகம் போன்ற கிராமங்கள் உள்ளன. காப்புக்காடுகள் நீண்ட மலைதொடராக சுமார் 14கி.மீ. தூரம் வரை பரந்து விரிந்துள்ளது. தொடர் மழை காரணமாக அடந்த காடுகளாக மாறிவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் மாச்சம்பட்டு, பல்லகுப்பம் காப்புக்காட்டுக்கு அருகாமையில் சிறுத்தை ஒன்று நடமாடுவதை கிராமமக்கள் சிலர் பார்த்து, அது அப்பகுதியில் உள்ள ஒரு குகையில் இருப்பதாகவும், அடிக்கடி சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக சிறுத்தை இடம் பெயர்ந்து துருகம், ஊட்டல் காப்புக்காடுகளில் சுற்றி திரிவதாக கிராமமக்கள் தெரிவித்தனர். இதனிடையே, சின்னமலையாம்பட்டையை சேர்ந்த குப்புசாமி வனப்பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது சிறுத்தையின் உறுமல் சத்தத்தை கேட்டுள்ளார். இதனால், அவர் அப்பகுதியில் இருந்து ஆடுகளை அவசர அவசரமாக ஓட்டி வந்துவிட்டார். இதில் ஆடு ஒன்று மட்டும் சிறுத்தையிடம் பலியாகிருப்பதை உணர்ந்தார். பின்னர், அதேபகுதியை சேர்ந்த குணாம்மாளின் ஆடு கடந்த இரு தினங்களுக்கு முன் மேய்ச்சலுக்கு சென்றபோது காணாமல் போனது. கல்லேரியை சேர்ந்தவரின் கன்று குட்டி வனப்பகுதி அருகே சென்றபோது சிறுத்தை இழுத்து சென்றதாக கூறினார். நேற்று காலை சின்னமலையாம்பட்டையை சேர்ந்த ராமய்யனின் மாடு திடீரென சத்தம் போட்டது. அங்கு வந்து பார்த்தபோது மாட்டின் மீது சிறுத்தையின் நககீறல் இருப்பதை பார்த்தனர். அப்பகுதி பொதுமக்கள், சிறுத்தை வந்து சென்றிருப்பதை உறுதி செய்தனர். இதனால், கடந்த சில நாட்களாக மாலை 5 மணிக்கு மேல் இப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது. எனவே இதுகுறித்து வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: