வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற புதுமாப்பிள்ளை பலி பள்ளிகொண்டா அருகே பரிதாபம் லாரி மீது பைக் மோதி விபத்து

பள்ளிகொண்டா, ஏப்.20: வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு சென்றபோது பள்ளிகொண்டா அருகே லாரி மீது பைக் மோதிய விபத்தில் தர்மபுரியை சேர்ந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக பலியானார். தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பெரும்பாலை கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. இவரது மகன் தினேஷ்(25). ஆந்திர மாநிலம், தடா பகுதியில் உள்ள தனியார் ஏர்கூலர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருக்கு கடந்த 3 மாதத்திற்கு முன்பு திருமணமாகி தமிழழகி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில், தேர்தலையொட்டி சொந்த ஊரில் வாக்களிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு தினேஷ் தனது பைக்கில் வேலூர் வழியாக தர்மபுரிக்கு சென்று கொண்டிருந்தார். தொடர்ந்து, நேற்று அதிகாலை பள்ளிகொண்டா அடுத்த கூத்தம்பாக்கம் தேசிய நெடுஞ்சாலை உள்ள மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பைக் நிலை தடுமாறியது. பின்னர், கண்ணிமைக்கும் நேரத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தினேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமாகி 3 மாதங்களே ஆன நிலையில், வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்தபோது புதுமாப்பிள்ளை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post வாக்களிக்க சொந்த ஊருக்கு சென்ற புதுமாப்பிள்ளை பலி பள்ளிகொண்டா அருகே பரிதாபம் லாரி மீது பைக் மோதி விபத்து appeared first on Dinakaran.

Related Stories: