மூதாட்டியை கொன்றவருக்கு வலை தனிப்படை போலீஸ் ஆந்திரா விரைவு தலையில் கல்லைபோட்டு

குடியாத்தம், ஏப்.23: மூதாட்டி தலையில் கல்லை போட்டு கொன்ற மனநலம் பாதிக்கப்பட்டவரை தேடி குடியாத்தம் போலீசார் ஆந்திரா விரைந்தனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் தரணம்பேட்டை பஜார் பகுதியில் பல்வேறு கடைகள் இயங்கி வருகிறது. அங்குள்ள கடைகளின் வெளியே கூலிவேலை செய்பவர்கள், வீடு இல்லாதவர்கள் யாசகம் பெறுபவர்கள் இரவில் தூங்குவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான அரிசி கடைக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்த சின்னக்குழந்தை(75) என்ற மூதாட்டியின் தலை மீது மர்ம நபர் கல்லை போட்டுள்ளார். இதில் மூதாட்டி துடித்து துடித்து தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சத்தம் கேட்டதும் அங்கு வந்த மக்கள், மர்ம நபரை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர் தப்பியோடி தலைமறைவானார். இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், மூதாட்டியை கொலை செய்தது அங்கு சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை தேடியும் கிடைக்காததால், இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையில் தனிப்படை அமைத்து நேற்று ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்திற்கு விரைந்து தேடி வருகின்றனர்.

The post மூதாட்டியை கொன்றவருக்கு வலை தனிப்படை போலீஸ் ஆந்திரா விரைவு தலையில் கல்லைபோட்டு appeared first on Dinakaran.

Related Stories: