பாலியல் தொல்லை புகாரில் கைதான குமரி பாதிரியார் நாகர்கோவில் சிறையில் இருந்து பாளை சிறைக்கு மாற்றம்.!

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே உள்ள சூழால் குடயால்விளையை சேர்ந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29) என்பவர் இளம்பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் எழுந்தவுடன், அவரது இளம்பெண்களுடன் பாதிரியார் ஆபாசமாக இருக்கும் காட்சிகளும் சமூக வலை தளங்களில் பரவின. பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், கடந்த 19ம் தேதி கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை வரும் 4ம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வழக்கில் இரு வாரங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என எஸ்.பி. ஹரிகிரன் பிரசாத் கூறி உள்ளார். இந்தநிலையில் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் தனி அறையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ இருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரை தனி அறையில் வைத்துள்ளதாக கூறப்பட்டது. நாகர்கோவிலில் இருந்தால், நண்பர்கள், உறவினர்கள் சந்திக்க வரலாம் என்பதால், இதை தவிர்க்கும் வகையில், தன்னை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என பாதிரியார் தரப்பில் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று மாலையில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் இருந்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார். பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் நாகர்கோவில் சிறையில் இருந்து, பாளை சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாதிரியாரிடம் இருந்து பறிக்கப்பட்ட செல்போன் இன்னும் கிடைக்கவில்லை. அந்த செல்போனை கண்டுபிடிப்பதில் போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்கிடையே பாதிரியாருடன் இளம்பெண்கள் இருப்பது போன்ற படங்களை சமூக வலை தளங்களில் பரப்பியவர்களை பிடிக்க ஏடிஎஸ்பி ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்களில் ஒரு பிரிவினர் தற்போது கேரளாவில் முகாமிட்டுள்ளனர்.

Related Stories: