சென்னை: கடந்த 2024 மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான நவாஸ் கனி வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எம்பி நவாஸ் கனி தரப்பில் மூத்த வழக்கறிஞர் சித்ரா சம்பத் ஆஜராகி, ஓ.பன்னீர்செல்வத்திடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் நான் பால்பண்ணை வைத்திருக்கிறேன். அதில் 40 மாடுகள் உள்ளன. அதன் மூலம் கிடைக்கும் வருவாயை குடும்ப செலவிற்காக பயன்படுத்தி வருகிறேன். மாடு வளர்ப்பு, விவசாயம், நிலங்கள் மட்டுமல்லாமல் பல தொழில்கள் செய்து வருகிறேன். வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள நிலங்கள் தொடர்பாக நினைவில் இல்லை என்று பதிலளித்தார்.
அப்போது நவாஸ் கனி தரப்பு வழக்கறிஞர், தமிழகத்தின் நிதியமைச்சராக இருந்தவருக்கு இது நினைவில்லையா என்று கேட்டார். அதற்கு ஓ.பன்னீர்செல்வம், தன்னுடைய ஆடிட்டருக்கு தான் அது தெரியும் என்றார். தொடர்ந்து பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் கோபமடைந்த ஓ.பன்னீர்செல்வம், நான் தொடர்ந்த தேர்தல் வழக்கில் என்னை மட்டும் கேள்வி எழுப்புவது ஏன்?. நான் வாங்கிய சில நிலங்கள் பஞ்சமி என்று தெரிந்த பின் அவற்றை திரும்ப ஒப்படைத்து விட்டேன் என்று பதிலளித்தார்.
