சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில்; ஆண்டவன் உத்தரவு பெட்டியில் உலக உருண்டை வைத்து பூஜை

காங்கயம்: காங்கயம் அருகேயுள்ள சிவன்மலை சுப்ரமணியசாமி கோவில் கொங்குமண்டலத்தில் முருகப் பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். மேலும், நாட்டில் வேறு எந்தக் கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சுப்ரமணியசாமியே பக்தர்களின் கனவில் தோன்றி குறிப்பிட்ட பொருளைக் கூறி அதை கோவில் முன்மண்டப தூணில் வைக்கப்பட்டுள்ள உத்தரவு பெட்டியில் வைக்க உத்தரவிடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கோவில் நிர்வாகத்தை அணுகி விபரத்தை கூறினால் சாமியிடம் பூக்கேட்டு அதன் பின்னர் கனவில் வந்த பொருளை உத்தரவு பெட்டியில் வைப்பார்கள்.  இவ்வாறு உத்தரவு பெட்டியில் வைக்கப்படும் பொருளுக்கு காலநிர்ணயம் ஏதும் கிடையாது.

அடுத்த பொருள் பக்தரின் கனவில் உத்தரவாகும் வரை உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு உத்தரவான பொருள் உத்தரவு பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் காலத்தில் அந்தப் பொருள் சமூகத்தில் ஏதாவது ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தும். அது நேர்மறையாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம்.  ஆண்டவன் உத்தரவு பெட்டியில் கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி முதல் வேல் வைத்து பூஜிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், முத்தூர், வேலம்பாளையம் பகுதியை சேர்ந்த கோகுல்ராஜா என்ற பக்தரின் கனவில் உத்தரவான அகிலம் என்ற உலக உருண்டை, அத்திரி என்ற பசு, அசுவம் என்ற குதிரை, 2 திருமாங்கல்ய சரடு ஆகிய 4 பொருட்கள் நேற்று (8ம் தேதி) முதல் வைத்து பூஜிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சிவாச்சாரியார் கூறுகையில்,‘‘ஆண்டவன் உத்தரவு போட்டியில் எந்த பொருள் வைக்கப்படுகிறதோ அது சமுதாயத்தில் ஏற்றம் கிரகங்களை பெறும் இப்போது வைக்கப்பட்டுள்ள பொருளால் வரும் காலத்தில் தான் போகப் போக தெரியவரும் என்றார்.

Related Stories: