ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வேர்களைத் தேடி பயணத்திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: இரண்டாம் கட்டமாக வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை 15 நாட்கள் வேர்களைத் தேடி பயணத்திட்டம் தொடங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களின் குழந்தைகள், இளம் மாணவர்கள் தாய்த் தமிழ்நாட்டின் மரபின் வேர்களோடு உள்ள தொடர்பை புதுப்பிக்கும் வண்ணம், ஆண்டுக்கு 200 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழ்நாடு பண்பாட்டு சுற்றுலாவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, பிஜி, இலங்கை மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இருந்து 57 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, இவ்வாணையரகம் மூலம் 2023ம் ஆண்டு டிசம்பர் 27ம் தேதி முதல் கடந்த ஜனவரி 10ம் தேதி வரை 15 நாட்களுக்கு தமிழகத்தின் முக்கிய சுற்றுலா, வரலாற்று மற்றும் பண்பாட்டு சிறப்புமிக்க இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தமிழ்நாட்டின் கலை, பண்பாடு குறித்து விளக்கப்பட்டது.

தற்போது இத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி தொடங்கப்பட்டு ஆகஸ்ட் 15ம் தேதி வரையிலான 15 நாட்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க இதுவரை (28.06.24 வரை) தென் ஆப்ரிக்கா, உகாண்டா, பிஜி, இந்தோனேஷியா, மொரிஷியஸ், ஆஸ்திரேலியா, மாலத்தீவு, கனடா, மியான்மர், மலேசியா, இலங்கை ஆகிய பதினொரு நாடுகளைச் சேர்ந்த 107 அயலகத் தமிழ் மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதற்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள அயலகத் தமிழர் நல ஆணையரகத்தின் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பங்கேற்று தமிழ்நாடு வரும் அயலகத் தமிழ் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள அரசுத் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, தொல்லியல் துறை உள்ளிட்ட பல துகளின் அலுவலர்கள் பங்கேற்றனர்.

The post ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை வேர்களைத் தேடி பயணத்திட்டம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: