வேறொரு பெண்ணுடன் நடக்க இருந்த திருமணத்தை நிறுத்தி காதலனை கரம்பிடித்த காதலி: ஆற்காடு அருகே பரபரப்பு

ஆற்காடு: வேறொரு பெண்ணுடன் தனது காதலனுக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்திய காதலி, காதலனை திருமணம் செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே உள்ள பரதராமி கிராமத்தை சேர்ந்தவர் யுவகணேஷ் (27). இவருக்கும் அம்முண்டியை சேர்ந்த உறவினரான 20 வயது இளம்பெண்ணுக்கும் நிச்சயிக்கப்பட்டு திமிரி அருகே உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் கடந்த 12ம் தேதி திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

இதையறிந்த பரதராமியை சேர்ந்த சந்தியா (20) என்பவர், ‘தன்னை யுவகணேஷ் காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாகவும், தற்போது வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும்’ என திமிரி போலீசில் கடந்த 11ம் தேதி புகார் அளித்தார்.

அதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அன்றைய தினமே யுவகணேஷை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில், சந்தியாவும் யுவகணேஷும் காதலர்கள் என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசாரின் அறிவுரையின்பேரில் திருமணம் நிறுத்தப்பட்டது. மேலும் நேற்று யுவகணேஷை விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு வருமாறு போலீசார் கூறியிருந்தனர்.

இந்நிலையில் யுவகணேசும், சந்தியாவும் திமிரி குமரகிரி முருகன் கோயிலில் நேற்று திடீரென திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கு சந்தியாவின் பெற்றோரும், உறவினர்களும் வந்துள்ளனர். ஆனால் யுவகணேஷ் பெற்றோர்கள் வரவில்லை என்று கூறப்படுகிறது. திருமணம் நடைபெற்றதை தொடர்ந்து புதுமண தம்பதியினர், காவல் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசியிடம் தாங்கள் திருமணம் செய்து கொண்ட விவரத்தை கூறினர். அதனை தொடர்ந்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

Related Stories: