கொடைக்கானல்: கொடைக்கானலில் நிலவும் குளிர் சீசனை அனுபவிக்க சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளிர் சீசன் நிலவுகிறது. அதிகாலையில் உறைய வைக்கும் குளிருடன் துவங்குகிறது. பகல் நேரத்தில் வெயில், அவ்வப்போது மேக கூட்டம் முகாமிடுகிறது. இதனால் இதமான சூழல் நிலவுகிறது. ஆனால் இரவில் தலைகீழாக நிலைமை மாறி உறைய வைக்கும் குளிர் நிலவுகிறது. இந்த குளிர் சீசன் ஜனவரி முடியும் வரை தொடரும். வரும் நாட்களில் உறை பனி தொடங்கும் நிலை ஏற்படும் என்று வானிலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதனிடையே, விடுமுறை நாளான நேற்று கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்.