வேலூர் மார்க்கெட்டிற்கு மாண்டஸ் புயல் காரணமாக மீன்கள் வரத்து குறைந்தது-விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை

வேலூர் : மாண்டஸ் புயல் காரணமாக வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு மீன்கள் வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் 80க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லரை விலைக்கும் விற்பனை செய்து வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் இருந்து கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் இருந்தும் வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு மீன்கள் விற்பனைக்காகக் கொண்டு வரப்படுகின்றன.

நள்ளிரவு 2 மணிக்கு மேல் மீன் மொத்த வியாபாரமும், காலை 6 மணிக்கு மேல் சில்லறை வியாபாரமும் நடைபெறுகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள் ஒன்றுக்கு 50 டன் வரை மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஞாயிற்றுக்கிழமையில் மட்டும் 70 முதல் 100 டன் மீன்கள் விற்பனை செய்யப்படுகின்றன. காலை முதல் இரவு வரை சில்லறை விற்பனை நடக்கிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று மீன்கள் விலை கடந்த வாரத்தை போலவே விலை உள்ளது. இருப்பினும் மாண்டஸ் புயல் காரணமாக வரத்து குறைந்துள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்பட்ட மாண்டஸ் புயல் காரணமாக மீனவர்கள் மீன்களை பிடிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடலுக்கு செல்லவில்லை. இதனால் வேலூர் மீன் மார்க்கெட்டிற்கு கடந்த வாரத்தைவிட மீன்கள் வரத்து குறைந்துள்ளது. கடந்த வாரம் 7 லோடு மீன்கள் வந்தது.

இந்த வாரம் 5 லோடுகள் மட்டுமே வந்தது. விலையில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. வஞ்சிரம் கிலோ ₹900 முதல் ₹1,000 வரையும், இறால் கிலோ ₹400 முதல் ₹450 வரையும், நண்டு கிலோ ₹450 முதல் ₹500 வரையும் விற்றது. சீலா ₹300, தேங்காய் பாறை ₹350, சங்கரா கிலோ ₹350 முதல் ₹400 வரையும், மத்தி ₹200, கடல் வவ்வா கிலோ ₹650 முதல் ₹700 வரையும், ஏரி, குளங்களில் வளரும் வவ்வால் கிலோ ₹150 முதல் ₹180 வரையும் விற்பனை செய்யப்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories: