விராலிமலை : உடை மாற்றும் அறை, குளியல் அறை இல்லாததால் விராலிமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் குளிப்பது, உடை மாற்றுவது என திறந்தவெளியில் செய்ய வேண்டிய நிலையால் பெண் பக்தர்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர்.விராலிமலை முருகன் கோயில் சிறப்பு பெற்ற தலமாகும் அருணகிரிநாதரால் பாடல் பெற்று அஷ்டமாசித்தி எனும் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை முருகன் இத்தலத்தில் தான் கற்றருளியதாக தல வரலாறுகள் கூறுகின்றன. 207 படிகளுடன் கொண்ட இம் மலைக்கோயிலின் மேலே வள்ளி, தெய்வானை சமேதராக ஆறுமுகங்களுடன் முருகன் மயில் மேல் அமர்ந்து காட்சியளிப்பது இக்கோயிலின் தனி சிறப்பாகும். தேசிய பறவையான மயில்கள் இம்மலையின் அடர்ந்த வனப்பகுதியில் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிவது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் கண்களுக்கு விருந்தாக அமையும், பல்வேறு சிறப்பு பெற்ற இந்த மலைக் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமல்லாது பல வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்கின்றனர்.