திருச்செந்தூர்: உடல்நலம் பாதிக்கப்பட்டு இருக்கும் நடிகர் போண்டா மணிக்கு இயன்ற உதவியை செய்வேன் என்று, திருச்செந்தூரில் சுவாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறினார். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வடிவேலு சுவாமி தரிசனம் செய்வதற்கு நேற்று முன்தினம் இரவு வந்தார். கோயிலுக்குச் சென்று மூலவர், சண்முகர், பெருமாள் உள்ளிட்ட சன்னதிகளில் அவர் வழிபட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘நான் நடித்து வரப்போகிற படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். தற்போது நாய்சேகர் ரிட்டர்ன்ஸ், மாமன்னன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறேன். மாரி செல்வராஜ் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்து உள்ளேன்.