குன்றத்தூர் பகுதிகளில் 500 கிலோ பழைய டயர்கள் பறிமுதல்

குன்றத்தூர்: குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு ஒழிப்பு  நடவடிக்கைக்காக மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 500 கிலோ பழைய டயர்ககள் பறிமுதல் செய்யப்பட்டன.கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா என்னும் கொடிய நோய் மக்களை ஆட்டிப்படைத்து வந்த நிலையில், தற்போது நோயின் தாக்கம் குறைந்து மக்கள் படிப்படியாக தங்களது இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். அதற்குள், தற்போது தமிழகம் முழுவதும் புதிதாக டெங்கு நோய் வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவாமல் தடுக்க அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, நேற்று குன்றத்தூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை துணை இயக்குநர் பிரியாராஜ் மற்றும் நகராட்சி ஆணையர் தாமோதரன் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்ட வீடுகளை பார்வையிட்டனர். அதனைதொடர்ந்து, லாலா சத்திரம் பகுதியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்காமல், வணிக நிறுவனம் ஒன்று, கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனத்தில் உபயோகப்படுத்திய பழைய டயர்கள் ஏராளமானவற்றை தேக்கி வைத்திருப்பதை கண்டறிந்தனர்.

சுமார் 500 கிலோ எடையுள்ள அந்த பழைய டயர்களை முறையாக அப்புறப்படுத்தினர். மேலும், தேக்கி வைக்கப்படும் பழைய டயர்கள், குப்பைகளில் இருந்து எவ்வாறு டெங்கு நோயை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் உற்பத்தியாகிறது. அவற்றை தடுக்க குடிதண்ணீரை கொதிக்க வைத்து குடிக்க வேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை பொதுமக்களுக்கு, சுகாதாரத்துறை மருத்துவர்கள் வழங்கினர்.

Related Stories: